செவ்வாய், 10 நவம்பர், 2009

பெண்ணாகையால்...



நின்றேன்...
"கனவு காணாதே"

நடந்தேன்...
"குனிந்து நட"

இருந்தேன்...
"ஒடுங்கி இரு"


படுத்தேன்...
"சரிந்து படு"

சிங்காரிதேன்...
"யாரை மயக்க"

கலைத்தேன்...
"மூளியாய் நிற்காதே"

பேசினேன்...
"அதிகம் பேசாதே"

மௌனியானேன்...
"ஊமையா நீ?"

அழுதேன்....
"குடும்பத்துக்கு தரித்திரம்"

சிரித்தேன்...
"பெண்ணுக்கு ஆகாது"

என் அசைவுகள் அத்தனையும்
தவறானதேன்?
"நீ பெண்"

வெள்ளி, 6 நவம்பர், 2009

ஐயா ஆச்சார சீலர்


அன்றொருநாள் மாலை வேளை, பஸ்ஸில் சனக்கூட்டமும் அவ்வளவாக இல்லை. என் முன் சீட்டில் இருந்த இருவரும் கதைத்துக் கொண்டிருந்ததில் ஒரு பெயர் மட்டும் தெளிவாகக் கேட்டது. அந்த பெயரைக் கேட்டதும் மிகுந்த ஆவலுடன் அவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்க முயன்றேன்.

ஏனென்றால் அந்த பெயருக்கு சொந்தக்காரர் மக்களிடையே மிகுந்த மரியாதைக்குரியவர். செல்வந்தர். தர்மவான். ஆச்சாரசீலர். அடிக்கடி உள்ளூரிலும் வெளியூரிலும் தான தர்மங்களை வழங்குபவர். அதையெல்லாம் விட அவர் மேல் எனக்கு பட்டு ஏற்படக் காரணம், அவர் வீட்டு வேலைக்காரன் என்ற வகையில் விசேட சலுகைகள், மரியாதைகள், சில லாபங்கள் எனக்கு கிடைப்பதே. சுருக்கமாக கூறுவதென்றால் ஐயா தெய்வமென்றால், நான் பூசாரி. அதாவது உண்டியல் காசு ஐயாவுக்கு. தட்சணை காசு எனக்கு.

இதையெல்லாம் மனதில் வைத்து அய்யாவை பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்க முயன்றேன். தகரடப்பா போலிருந்த அந்த பஸ்ஸின் இரைச்சலிலும் பகீரத பிரயத்தனம் செய்து அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்டேன். " உயர்ந்த மனிதர்... புலாலை கையாலும் தொடாத பக்திமான்... மது மாது எதையும் வீட்டுக்குள் அனுமதிக்காத ஆச்சாரசீலர். இதுதான் அவர்கள் புகழாரப் பேச்சின் சாராம்சம்.

அவர்கள் பேச்சை கேட்ட பின்னர் ஐயா பற்றி நினைத்துப் பார்த்தேன். அவர்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். ஐயா உயர்ந்த மனிதர்தான். ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் போல ஆறடி உயரமிருப்பார். புலால் உன்னவு மட்டுமல்ல எந்த உணவையும் கையால் தொடுவதில்லை. கரண்டியும் முள்ளுக் கரண்டியும் வைத்துதான் சாப்பிடுவார். மதுவோ மாதுவோ எல்லாமே நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும்தான். வீட்டிற்குள் எதையுமே எடுத்து வருவதில்லை. இவ்வளவு ஏன்... எந்த தாசியுடன் இரவுகளில் தங்கிவிட்டு அதிகாலையில் வீடு வந்தாலும் ஸ்நானம் பண்ணாமல் வீட்டுக்குள் நுழைவதே இல்லை. அது மார்கழி குளிர்காலமென்றாலும் கூடத்தான்.

ஐயாவின் சிறப்பு எனக்கு புரியுது. அனால் ஐயாவின் பொண்டாடிக்கு ஏன் இது புரியவில்லை? வீட்டிக்கு போனதும் முதல் விலையாக அவங்களுக்கு இதையெல்லாம் புரிய வைக்க வேண்டும்.

எதையென்று கேட்கிறீங்களா? என்னோட ஐயா ஆச்சார சீலர் என்பதைத்தான்!

திங்கள், 2 நவம்பர், 2009

சரித்திரத்தில் மற்றுமொரு சாணக்கியன்



குடும்பத் தலைவராய் இருந்த அப்பாவின் மறைவு அவரின் இரத்தமான எங்களுக்குத் தந்த அதே வலியை அவரருடன் பழகியவர்களும், அவரின் இரசிகர்களும் அனுபவித்ததைக் கண்டு நாமே வியந்து போனோம். எம்மைப் போலவே அவரை அறிந்த ஒவ்வொருவரும் அவரின் மறைவுக்காகக் கலங்கிப் போனார்கள். எங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்துவிட்டு தம்மையே ஆறுதல்படுத்த முடியாமல் அழுதவர்கள் பலர்.” இது ஒரு சாணக்கியனின் மறைவு பற்றி அவரின் மகளின் வலியும் ஆச்சர்யமும் கலந்த வார்த்தைகள்.

அவரைச் சாணக்கியன் என்று கூடச் சொல்ல முடியாது. இவர் சாணக்கியனை விடச் சிறந்தவர் என்பதே என் எண்ணம். பொதுவாக இராஜதந்திரிகளையே சாணக்கியன் என்று புகழுவர். அந்தச் சாணக்கியன், இராஜதந்திரி என்ற ஒரு முகத்தையே கொண்டவன். ஆனால் சாணக்கியன் என்ற பெயரில் படைப்புகள் பலவற்றைப் படைத்த சி.இராமச்சந்திரனோ ஓவியவர், எழுத்தாளர், சிற்பி, கவிஞர், பத்திரிகையாளர், கேலிச்சித்திர வரைஞர் எனப் பலமுகங்களைக் காட்டியது மட்டுமன்றி ஒவ்வொரு துறையிலும் உச்சத்திறமையை வெளிப்படுத்தித் தன்னை நிலை நிறுத்தியவர்.

இந்த மாபெரும் கலைஞர், அறிஞர் கடந்த ஒக்டோபர் மாதம் 3 ஆம் தகதி, பூரணை தினத்தில் இவ்வுலகை விட்டு நீங்கி இறைபதமடைந்து விட்டார். புத்தர் பிறந்து, ஞானமடைந்து, முக்தியடைந்த அதே பூரணை நாளொன்றிலேயே இவரும் இறைபதமடைந்துள்ளார்.

பரிசு தொடரில் அப்பா தொடர்ந்து எழுதி வந்த பௌத்த மதச்சிறப்புக் கூறும் குண்டலகேசி கதையை நிறைவு செய்தது கொண்டு அம்மதத்தின் சிறப்பு நாளான பூரணையிலேயே உலகை விட்டுப் போய்விட்டார். பௌத்த மதம் போதித்த அன்புநெறியிலேயே வாழ்தவர். அவர் யாரிடமும் கோபப்படமாட்டார். அதிர்ந்து பேசமாட்டார். அன்பாகவும் நிதானமாகவுமே பேசுவார்.” என்கிறார் இராமச்சந்திரனின் இளையமகள்.

அவர் கூறுவது முற்றிலும் உண்மையென்பதை உணர்ந்த அவரின் மகள் குறிப்பிடும் குண்டலகேசி தொடரே தக்க சான்றாக இருக்கும். பொதுவாகச் சிறுவர் இலக்கியங்களைப் படைப்பதே டினமென்பர். அதற்கு குழந்தைகளுடன் நெருக்கம் வேண்டுமென்றும், அவர்கள் உள்ளத்தைப் புரிந்து அவர்கள் இரசனைக்கேற்ப படைக்க வேண்டுமென்றும் கூறுவர். இதையெல்லாம் தாண்டி ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசியையே சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் படைப்பதானால் அவருக்கு சிறுவர்களுடன் எத்தகைய நெருக்கம் இருந்திருக்கும், அவர் உள்ளம் எவ்வாறு மென்மையாக குழந்தை உள்ளமாக இருந்திருக்குமென்பதை உறுதிப்படுத்த வேறு சாட்சி தேவையில்லை.

இவர் மறைந்ததற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த பரிசு இதழில் குண்டலகேசி தொடர் நிறைவடைந்திருந்தது. அவர் அந்தத் தொடரைப் பூர்த்தி செய்து விட்டே உயிரிழந்திருந்தார்.

அதிகளவில் அவருக்கு புகழைத் தேடித் தந்தது அவரின் ஓவியங்களும், கேலிச்சித்திரங்களுமே. “அப்பா பொதுவாகத் தன்னை விளம்பரப்படுத்த விரும்பாது விலகியிருந்த போதும் சில விருதுகள் அவரைத் தேடி வந்தன. மத்திய மாகாண சாகித்திய விழாவில் இரு முறை சிறந்த ஓவியருக்கான விருதுஇலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த கேலிச்சித்திரக் கலைஞருக்கான விருது… ‘ஓவியர் திலகம்எனும் பட்டம் இப்படி ஒரு சில விருதுகளே கிடைத்துள்ளன.” என அவரின் மற்றொரு மகள் கூறுகிறார்.

நல்லவேளை அவர் விலகியிருந்தார் என்றே என் மனதில் பட்டது. இல்லையென்றால் ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் தொடர்பான அத்தனை விருதுகளையும் தானே தட்டிக் கொண்டு போயிருப்பார். அவரின் அத்தனை ஓவியங்களும் கலைநயம் மிக்கவை.

அரசாங்கப் பாடசாலைகளில் பயிற்றப்படும் புத்தததகங்களில் பெரும்பாலானவற்றிலுள்ள ஓவியங்களை சந்திரா எனும் இராமச்சந்திரனே வரைந்துள்ளார். அப்புத்தகங்களின் அட்டைப்படங்களில் கூட இவரின் கைவண்ணமே தெரியும்.

சுந்திராவின் ஓவியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவர் குடும்பத்துடன் கொண்டிருந்த ஈடுபாடு தெரிய வந்தது. “அப்பாவின் ஓவியப் பெண்களில் எல்லாம் அம்மாவின் சாயல் தெரியுமென்று அப்பாவின் இரசிகரொருவர் அடிக்கடி சொல்லுவார்.” என்ற இளைய மகளை இடைமறித்த இரண்டாவது மகள் அப்பாவிற்கு குடும்பத்தில் அதீத ஈடுபாடு. குடும்பமும் கலையும் மட்டுமே அவரின் உலகம்என்றார். பொன்னையும் புகழையும் விரும்பும் உலகில் இப்படியும் ஒருவர்.

இவர் தினக்குரல் பத்திரிகையில் வரையும் அரசியல் கேலிச்சித்திரங்கள் பல தரப்பினராலும் பாராட்டிப் பேசப்பட்டவை. ஆனால் இறுதிக் காலத்தில் அவரின் திறமை சரிவரப் பயன்படுத்தப்படவில்லையென்றே கூறப்பட வேண்டும். வித்தியாசமான கற்பனை வளத்துடன் பொருள் பொதிந்த கேலிச்சித்திரங்களைக் குறிப்பாக அரசியல் கேலிச்சித்திரங்களை சாணக்கியன், ரிஷி, சந்திரா போன்ற பெயர்களில் வரைந்த இவர் சில அச்சுறுத்தல்களால் அவற்றைச் சற்றுத் தவிர்த்து சிறுவர் ஓவியங்களையே அதிகம் வரைந்தார். “விமானம் ஓட்டத் தெரிந்த என்னை சைக்கிளோட்ட வைச்சாச்சுஎன்று அடிக்கடி சொல்லுவாரென அவரின் மகளொருவர் கவலையுடன் தெரிவிக்கிறார்.

இதே நேரம் அப்பாவின் கேலிச்சித்திரங்கள் பலரைச் சிரிக்க வைத்துள்ளது. சிலரைக் கோபப்படவும் வைத்துள்ளது. ஆனால் கோபப்பட்டவர்கள் கூட முதலில் அதைப் பார்த்து வியந்து சிரித்த பின்னரே கோபப்பட்டதாகக் கூறியிருக்கிறார்களெனப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

ஓவியங்களைப் போலவே சிற்பங்களையும் படைத்துள்ளார். புசல்லாவை அயர் டிவிசன், கந்தப்பளை, லபுக்கலை, தலவாக்கலையிலுள்ள மட்டுகலை ஆகிய நான்கு இடங்களிலுள்ள முத்துமாரியம்மன் கோயில்களுக்கான சிற்பங்களை இவரே உருவாக்கியுள்ளார். இதைத் தவிர கடைகளுக்கும் சிற்பங்கள் செய்து விற்றுள்ளார். சிறு வயதிலேயே மரங்கள் எடுத்து மரப்பாச்சி பொம்மைகள் செய்து சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பாராம். இத்தனைக்கும் அவர் சிற்பிகள் பரம்பரையைச் சேர்ந்தவரோ அல்லது அதனுடன் தொடர்பான குடும்பப் பின்னணியையோ கொண்டவரல்ல.

அப்பாவின் அம்மா, அப்பா இருவருமே தோட்டத் தொழிலாளிகள். அவருக்கு 3 சகோதரிகள் மட்டுமே. படித்து முடித்த பிறகு அவரின் சொந்த இடத்தில் சாதாரண கடையொன்றிலேயே வேலை செய்தார். அந்தக் காலங்களில் பத்திரிகைக்கு கதை எழுதுவார். அதற்கான ஓவியங்களையும் இணைத்து அனுப்புவார். அந்தத் திறமையே வீரகேசரி பத்திரிகையில் அவர் பத்திரிகையாளராக இணையக் காரணமானது.” என்கிறார் அவரின் மகள்களிலொருவர்.

அதன் பின்னர் சுடரொளி, தினக்குரல் ஆகிய தேசியப்பத்திரிகைகளில் பணி புரிந்துள்ளதுடன் பாரதி, சித்ரா போன்ற பத்திரிகைகளை ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். அத்துடன் தனது கடைசிக் காலத்தில் ஞாயிறு தினக்குரலின் பரிசு இணைப்பின் ஆசியராகவும் மலையகப் பகுதியின் மலையகப்பகுதியின் பொறுப்பாசிரியராகவும் பணி புரிந்தார்.

கலையும் வறுமையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் எனலாம். அந்த வகையில் சுயம்பு போன்ற இவரையும் வறுமை விட்டு வைக்கவில்லை. தனது சொற்ப சம்பளத்திலும் மனைவி தோட்ட வேலை செய்து ஈட்டும் வருமானத்திலேயே குடும்பச் சக்கரம் ஓடியது. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பார்கள். இவருக்கோ அந்த எண்ணிக்கையில் ஒன்றுதான் குறைவு, 4 பெண் பிள்ளைகள். ஆனால் வறுமையில் இருந்த அவர்களைப் நன்கு கற்பித்து நல்ல நிலையில் வளர்த்தெடுத்ததன் மூலம் சிறந்த குடும்பத்தலைவராகவும் நிமிர்ந்து நிற்கின்றார்.

அவரைப் போல திறமையான ஒருவர் மறைந்தது கலை உலகிற்கு பேரிழப்பே. இவரின் திறமைகளின் சொச்சங்கள் அவரின் வாரிசுகளிடம் இருந்தாலும் இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற போது, அவரைச் சந்தித்த பிரபலம் ஒருவர்ங்கப்பாவை இதுவரை சந்திக்காமல் இருந்தது எவ்வளவு துரதிஷ்டமாகி விட்டது.” என்று கலங்கினாரென அவரின் மகள் கூறுகிறார். கலை, மொழி பேதம் கடந்ததென்ற வகையில் அவர் மட்டுமல்ல, அவரை இழந்து போயுள்ள ஒவ்வொரு மனிதனும் துரதிஷ்டசாலியே! இவரின் மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பே!

ஆனாலும் அவர் நமக்காக, இந்த உலகிற்காக விட்டுச் சென்ற அரிய பொக்கிஷங்கள் அவரின் படைப்புகள். அவை நூலுருப் பெற வேண்டும் என்ற அவரின் ஆசை நிறைவேறும் முன்னரே உலகை விட்டுச் சென்று விட்டார். எத்தனையோ நூல்களை தொகுக்குமளவு படைப்புகளை எமக்குத் தந்துவிட்டு! அவரின் ஆசை நிறைவேறி, அவை நூலுருப் பெற்று பயன் பெறுவதுடன் அவர் மறைந்தாலும் அவரின் நூல்கள் நிலைத்து வாழ வேண்டும்.




சாணக்கியன் வரைந்த சில கேலிச்சித்திரங்கள்...




















வெள்ளி, 3 ஜூலை, 2009

கடல் கடந்த தேசத்தில் கண்திருஸ்டி பூதமாய்!!



இணையதளத்தில் நீங்கள் தரவேற்றம் செய்த உங்கள் புகைப்படம் கடல் கடந்த நாடொன்றில் விளம்பரப் பதாதையாக இருந்தால்.... சீ அப்படி இருக்காது. விளம்பரத்திற்காக போஸ் கொடுக்க பிரபல நட்சத்திரங்களும் மாடல்களும் இருக்கும் போது யார் இதையெல்லாம் விளம்பரமாகப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கேட்கிறீர்களா?


சில காலம் முன்னர் டானிலே – ஜெப் சிமித் தம்பதியினரும் உங்களைப் போலதான் அலட்சியமாகப் பதில் சொல்லியிருப்பார்கள். ஆனால் இன்று அவர்களால் இதை அலட்சியப்படுத்தவே முடியாது.


அமெரிக்க சென் லூஸிஸை அண்டிய பகுதியில் வாழும் இவர்கள் குடும்பப்புகைப்படம் ஐரோப்பிய கண்டத்திலுள்ள செக் குடியரசின் தலைநகரான பராக்கில் ஆளுயர விளம்பரப் பதாதையாக உள்ளது. இத்தாலிய உணவுகளை இறக்குமதி செய்யும் கடையொன்றின் விநியோகச் சேவைக்கான விளம்பரமாகவே இவர்களின் குடும்பப்புகைப்படம் பயன்பட்டிருக்கிறது.


சேக் தலைநகரிற்கு சென்றிருந்த இவர்களின் நண்பரொருவர், ஒரு சுப்பர் மார்கெட் தொகுதியில் ஆளுயர விளம்பரமாக சிரித்தபடி இருந்த டானிலேயின் குடும்பத்தின் புகைப்படத்தைப் பார்த்துள்ளார். உடனேயே அந்நண்பர் டானிலே குடும்பத்தினருக்குத் தெரிவித்ததுடன் கடை உரிமையாளருக்கும் அறிவித்துள்ளார்.அனுமதியின்றி இப்புகைப்படத்தை விளம்பரமாக்கி கடை உரிமையாளரோ, “இது உண்மையான ஒரு குடும்பமெனத் தெரியாது. கம்பியூட்ரில் போலியாக உருவாக்கப்பட்ட குடும்பப்படம் என்றுதான் நினைத்தேன். அது உண்மையான குடும்பம் என்று தெரிந்தவுடனேயே அந்த விளம்பர பதாதையை அகற்ற நடவடிக்கை எடுத்துவிட்டேன். அந்த குடும்பத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் மன்னிப்புக் கோரி மின்னஞ்சல் அனுப்பப் போகிறேன்.” என்று அமைதியாகவே பதிலளித்து விட்டார்.


இந்தப் புகைப்படம் திருமதி.சிமித்தால், அவரின் நத்தார் வாழ்த்து மடலாக வடிவமைக்கப்பட்டு ஓர் இணையத்தளத்தில் தரவேற்றப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படம் விளம்பரப் பதாதையாக, கடல் தாண்டி… கண்டம் தாண்டி… உலகின் ஒரு பகுதியில் இருக்கும் செய்தி தெரிந்த பின்னே இவர்கள்; இணையத்தளத்தில் புகைப்படத்தைத் தரவேற்றம் செய்வது தொடர்பில் எச்சரிக்கையடைந்துள்ளனர்.


ஆனால் விளம்பரமாய் செக் குடியரசில் பிரபலமானது மட்டுமன்றி, இந்தச் செய்தி மூலம் உல

கின் பல நாடுகளிலுமுள்ள மக்களுக்கு அறிமுகமாகிவிட்டார்கள்.


இணையத்தில் புகைப்படத்தைப் தரவேற்றுவது தொடர்பாக பல தரப்புகளிலிருந்தும் எச்சரிக்கைகள் வருகின்ற போதிலும் அவற்றை அலட்சியம் செய்வது போல இந்த சம்பவத்தையும் வாசித்துவிட்டு மறக்கப் போகிறீர்களா? இல்லை நாமும் உலகின் ஏதோ ஒரு நாட்டில் விளம்பர மாடலாக இருப்பேன் என்று கனவு காணப் போகிறீங்களா….? எதுவாயினும் அது உங்க இஷ்டம்.


ஆனாலும் ஒரு நிமிடம்! உங்க புகைப்படம் உணவு விநியோகச் சேவை விளம்பரத்துக்கு மட்டும்தான் பயன்படும் என்று சொல்ல முடியாது. இவ்வளவு ஏன் விளம்பரமாகத்தான் பயன்படும் என்றும் சொல்ல முடியாது. வீட்டு வாசலில் கண்திருஷ்டி பூதத்தின் படத்துக்குப் பதிலாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.


அதுக்கென்ன கடல் கடந்த ஏதோ ஒரு தேசத்தில்தானே கோமாளியாகப் போகிறோம்!!


வியாழன், 11 ஜூன், 2009

பிராயசித்தம்



பஞ்சத்தில் நாடு!

பட்டினியில் மக்கள்!

பழக் கலவை பூசி

பாலில் குளிக்கிறார்

பிள்ளையார்!

சனி, 9 மே, 2009

கிளியோபட்ரா அழகியா?


2039
வருடங்களின் பின்
னர் வந்த சந்தேகத்தால்

கல்லறையைத்
தேடும் ஆராச்சியாளர்கள்






"காதல் அழகினை அடிப்படையாகக் கொண்டு தோன்றுவதில்லை. இலக்கியங்களும் இன்றைய திரைப்படங்களும்தான் காதலி அழகை முதன்மைப்படுத்திக் காட்டியுள்ளதுடன் காதலுக்கு புறவழகுதான் முக்கியம் என்பது போல் போன்றதொரு மாயையையும் ஏற்படுத்தியுள்ளன." என்றொரு குற்றச்சாட்டை முன்வைக்கும் தர்க்கத்தை உலக வரலாற்றிலே உயர்வான காதலர்களாகவும், அழகான ஜோடியாகவும் நம்பப்படும் கிளியோபட்ரா - மார்க் அண்டனி ஜோடி ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் இறந்து 2039 வருடங்கள் கடந்து விட்டனவே! என்று ஆச்சரியப்படுகிறீர்களா? உடல்கள் மட்டுமே மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டன. ஆனால், அவர்கள் வரலாற்றில் நிலைத்து வாழ்கிறார்கள். மீளாத்துயிலில் மண்ணுக்குள் உறங்கி விட்ட உடல்களைக் கூட வெளிக் கொண்டு வர ராச்சியாளர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

கிளியோபட்ரா - மார்க் அண்டனி காதல் ஜோடி பற்றி வரலாறு மற்றும் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சில விடயங்கள் இன்னமும் சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கின்றன. நவீன காலத்து மக்களாகிய நாம் கண்களால் காண்பதை மட்டுமே நம்புபவர்கள் என்ற நம்பிக்கையில் இந்த சர்ச்சைகளுக்கு விடை காணும் முகமாகவே மண்ணுள் புதையுண்ட காதலர்களைத் தேடுகின்றனர்.

இந்தக் காதலர்கள் நம்மால் நம்பப்படுவது போலவும் இலக்கிய வரலாறுகள் கூறுவது போலவும் அழகானவர்களா? ஆழ்ந்த அன்பு கொண்டவர்களா? இவர்கள் உடல்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்டதா? என்ற பல கேள்விகள் இந்த ஆய்வின் பின்னணியில் உள்ளன.

எனவே , இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடியது என நம்பப்படுகின்ற கிளியோபாட்ரா - மார்க் அண்டனியின் சமாதியைத் தேடும் பணிகள் எகிப்தின் மேற்கு அலெக்சாண்றியா மலைப்பகுதியில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும் அப்பகுதியில் ஏற்கனவே இடம்பெற்றுவரும் அகழ்வாராச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட மம்மிகள், கிளியோபாட்ரா - மார்க் அண்டனியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் மார்க் அண்டனியினது எனக் கருதப்படும் முகமூடி என்பன அவர்கள் சமாதி மிக அருகிலேயே இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

உலக வரலாற்றில் வல்லமை மிக்கவர்களாகக் கூறப்படும் ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் அண்டனி ஆகிய இரு மாவீரர்களின் காதலியா இருந்த கிளியோபாட்ரா வாழ்ந்ததோ வெறும் 39 வருடங்களே. ஆனால் 2039 வருடங்களின் பின்னரும் நினைவு கூரப்படும் வகையில் தன் பெயரை நிலைநாட்டிச் சாதனை படைத்துள்ளார்.

இந்த மாவீர்களின் காதலி பேரழகியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். மேலும் கிளியோபாட்ரா, மார்க் அண்டனி ஜோடியை பேரழகு மிக்க ஜோடியாக ஹோலிவூட் நம்மை நம்ப வைத்துள்ளது. கிளியோபாட்ரா, மார்க் அண்டனி என்று நினைத்தாலே எலிசபெத் டெய்லர், ரிச்சட் புரூட்டன் ஆகிய இருவரினதும் அழகான உருவங்களே கற்பனைத் திரையில் தோன்றுகின்றன. ஹோலிவூட்டில் கிளியோபாட்ராவாக நடித்த எலிசபெத் டெய்லரும், மார்க் அண்டனியாக நடித்த ரிச்சட் புரூட்டனும் இந்த மாயையை நம்முள் விதைத்து விட்டனர்.

ஆனால் அகழ்வுகளில் கிடைக்கப் பெற்ற கிளியோபாட்ரா மற்றும் மார்க் அண்டனியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களே இப்பொழுது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் வரலாற்று இலக்கியங்கள் இந்த ஜோடியை மிகைப்படுத்தி அழகாகக் காட்டியுள்ளன என்ற வாதமும் முன் வைக்கப்பட்டுள்ளது.

நாணயங்களைப் பார்க்கும் போது கிளியோபாட்ரா, மார்க் அண்டனி ஜோடியினருக்கும் எலிசபெத், ரிச்சட் புரூட்டனுக்கும் தூரம் அதிகம். ஒப்பிட்டுக் கூட பார்க்க முடியாது. ஆனால் கிளியோபாட்ராவில் ஏதோ ஒரு வித கவர்ச்சி இருந்திருக்கலாம். ரோமானிய எழுத்தாளர்கள் கூறுவது போல புத்திசாலியாகவும் இனிமையான குரலை உடையவளாகவும் இருந்ததால் ஏற்பட்ட கவர்ச்சி அவளை அழகியாக மிகைப்படுத்திக் கூறக் காரணமாக இருந்திருக்கலாம் என்கின்றனர்.

இந்த நிலையில், ஷேக்ஸ்பியருக்கு கிளியோபாட்ரா எப்படி இருந்தாள் என்பது முக்கியமல்ல. கி.பி 1564 இல் பிறந்த அவருக்கு கி;மு 30 ஆம் ஆண்டில் இறந்த கிளியோபாட்ரா எப்படி இருந்தாள் என்பது தெரியாது. தன் நாடகத்தின காதாபாத்திரமாக அவளைக் கற்பனையிலேயே உருவாக்கியுள்ளார். எனவே ஷேக்ஸ்பியரின் கிளியோபாட்ராவை முன் வைத்து அவள் அழகி என்பதை நிலை நாட்ட முடியாது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் அவள் அழகை நிரூபிக்க அகழ்வாராச்சி மட்டும்தான் ஒரே வழியா? அப்படியும் கூற முடியாது. ஏனெனில் அகழ்ந்தெடுக்கப்படும் கிளியோபாட்ராவின் உடல் இப்பொழுது வெறும் எலும்புத் தொகுதியாகவே இருக்கும். அதிலிருந்து அவளின் மூக்கு எலிசபெத் டெய்லரது மூக்குப் போல நீளமானதா என்பதை ஊகிக்க முடியாது. அந்தக் கூட்டில் மூக்கின் குருத்தெலும்போ கட்டமைப்போ இருக்காது. இரு துவாரங்களே காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதே போன்று கிளியோபாட்ரா, மார்க் அண்டனி பற்றிக் காணப்படும் இன்னொரு சிக்கலான பிரச்சனை அவர்கள் காதல் பற்றியது.

கிளியோபாட்ரா, மார்க் அண்டனி காதல் மிக உயர்வானதாகக் கூறப்படுகிறது. மார்க் அண்டனி கிளியோபாட்ராவுக்காக உலகையே பகைத்தான் எனவும் அவன் மரணத்தைத் தொடர்ந்து அவளும் பாம்பைத் தன் மார்பில் கொத்தச் செய்து தற்கொலை செய்து கொண்டாள் எனவும் கூறப்படுகின்றது.

அவர்கள் காதல் பற்றிய இக்கருத்துக்கு எதிர்மாறான கருத்துக்களும் கூறப்படுகின்றன. வரலாற்றிலே மிகவும் வல்லமை மிக்கவளாகவும் பயங்கரமானவளாகவும் இருந்த கிளியோபாட்ரா காமவெறி கொண்ட பெண் எனவும் கூறப்படுகின்றது. இதனாலேயே ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க அண்டனியை மணந்தாள் என்கின்றனர். ஓர் எழுத்தாளர் இவபை; புராதன உலகின் 'மொனிக்கா லாவின்ஸ்கி' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி ஆட்சி வெறி பிடித்தவள் எனவும் இந்த மாவீரர்களை அதற்காக பயன்படுத்தி அரசியல் நோக்கிலேயே காதலித்தாள் எனவும் வாதிடப்படுகின்றது. மார்க் அண்டனி இறந்த போது ஆட்சி அதிகாரமும் அவளை விட்டு விலகியதாலேயே தற்கொலை செய்து கொண்டாள் - காதலால் அல்ல என்றும் கூறப்படுகிறது.

அப்படியானால் ஷேக்ஸ்பியர் இவர்கள் காதலை ஏன் உயர்வாகக் கூற வேண்டும்? என்ற கேள்வி உருவாகின்றதல்லவா? பொதுவாகவே கவிஞர்களும் எழுத்தாளர்களும் காதல் பற்றி மிகைப்படுத்திக் கூறுவNது வழமை. அவர்களுக்கு அவர்களின் படைப்புக் காதாபாத்திரம் நிறைவு பெற வேண்டுமென்பதே குறிக்கோள். குறித்த கதாபாத்திரத்தை அவர்கள் எதற்காக படைத்திருக்கிறார்களோ அந்த நோக்கிலேயே அந்தக் கதாபாத்திரத்தைக் கற்பனையாக வளர்த்துச் செல்வர். அவர்களுக்கு உண்மை தேவையில்லை. அந்த வகையில்தான் ஷேக்ஸ்பியரும் கிளியோபாட்ரா, மார்க் அண்டனியைப் படைத்து வளர்த்துள்ளார் என பதிலளிக்கப்படுகிறது.

இலக்கிய வரலாறுகள் கூறுவது போல இருவரும் உயர்ந்த காதலர்கள் ஆகையால் உடல்களும் ஒன்றாகப் புதைக்கப்பட்டன என்ற செய்திப்படி இரு உடல்களையும் அகழ்வுகள் மூலம் பெற்றால் அவர்கள் காதலை உண்மை என நிரூபிக்க முடியும். இந்த முயற்சியில் தான் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அகழ்வாராச்சிகள் மூலம் கிளியோபாட்ரா, மார்க் அண்டனி சமாதி கண்டுபிடிக்கப்பட்டு அதில் இரு உடல்கள் ஒன்றாகக் காணப்பட்டு ஒன்றை கிளியோபாட்ராவினது என்பது நிருபிக்கப்படும் பட்சத்தில் அருகில் இருப்பது மார் அண்டனிதான் என்பதை உறுதிப்படுத்த தேவையில்லை. அது நிச்சயமாக மார்க் அண்டனியாகவே இருக்கும்.

ஆனால் உயர்ந்த காதல் அவர்களுக்குள் நிலவியது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? அன்பின் ஆழத்தை, காதலை அந்த எலும்புக் கூடுகளைக் கொண்டு எவ்வாறு நிருபிக்க முடியும்? ஏதோவொரு காரணத்தால் அவையிரண்டும் ஒன்றாகப் புதைக்கப்பட்டிருக்கலாம். அதைக் கொண்டு இலக்கியங்கள் உயர்வான காதலாக மிகைப்படுத்திக் கூறியிருக்கலாம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

இந்த வாதமும் சரியானதாகத் தோன்றுகிறதா? இந்தச் சிக்கல்களுக்கே விடை தெரியாத நிலையில் இவ்விரண்டையும் இணைத்து மூன்றாவது புதிய பிரச்சனை உருவாக்கப்படுகின்றது.

காதலில் அழகு முதன்மையற்றது என்பதை இவர்கள் காதல் நிருபிக்கின்றதா என்பதுதான் கேள்வி. இந்த உலகில் ஐஸ்வர்யா ராஜூம் அபிஷேக் பச்சனும் மட்டும் காதலிக்கவில்லை என்பதே இதற்குப் போதுமான பதில்.

ஆனால், நாணயங்களில் உள்ளவாறு கிளியோபாட்ராவும் மார்க் அண்டனியும் அழகற்றவர்கள் என்பதும் இலக்கியங்கள் கூறுவது போல அவர்கள் காதல் உயர்வானது என்பதும் அகழ்வாராச்சிகள் மூலம் நிருபிக்கப்படின் காதலின் மகத்துவம் வரலாற்றிலேயே அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

வரலாற்றில் நிலைத்த ஜோடியின் மூலம் காதலின் மகத்துவத்தை நிலைநாட்டவும், அந்த ஜோடி பற்றிய கேள்விகள், அவர்கள் மரணத்தின் பின்னாலுள்ள மர்மம் என்பவற்றை அறியவும் 2039 வருடங்கள் காத்திருந்த உலகம் இன்னமும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதும் காத்திருந்தாலும் காதலின் மகத்துவம் நிலை நாட்டப்படுமா? என்பதும் தெரியவில்லை.